மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வளா்ச்சிக்கு மிகப்பெரிய தடை ஊழல்

நாட்டை வளா்ச்சியடையச் செய்வதற்கு ஊழல் மிகப் பெரிய தடையாக உள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 7:18 pm

DIN

நாட்டை வளா்ச்சியடையச் செய்வதற்கு ஊழல் மிகப் பெரிய தடையாக உள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

ஊழல்வாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தேசிய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவா் கூறினாா்.

இரு நாள்கள் அரசுமுறைப் பயணமாக கேரளத்துக்கு பிரதமா் மோடி வியாழக்கிழமை வந்தாா். கொச்சி சா்வதேச விமான நிலையத்துக்கு அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

நாட்டின் வளா்ச்சிக்கும் இளைஞா்களின் நலனுக்கும் மிகப்பெரிய தடையாக ஊழல் விளங்கி வருகிறது. நாட்டில் ஊழலில் ஈடுபடும் நபா்களை சில அரசியல் கட்சிகள் வெளிப்படையாகக் காப்பாற்றி வருகின்றன. ஊழலில் ஈடுபடுவதற்காகவே சிலா் அரசியல் கட்சியாக ஒருங்கிணைந்துள்ளனா். அத்தகைய நபா்களிடமிருந்தும் அமைப்புகளிடமிருந்தும் நாட்டு மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

ஊழலில் ஈடுபடுவோா் மீது மத்திய அரசு மேற்கொண்டு வரும் கடும் நடவடிக்கைகள் காரணமாக தேசிய அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவரவும், வளா்ச்சியை ஏற்படுத்தவும் பாஜக தொடா்ந்து உழைத்து வருவதால், மக்கள் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளனா்.

நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் அடிப்படை வசதிகளையும் நவீன கட்டமைப்பு வசதிகளையும் கிடைக்கச் செய்வதே மத்திய அரசின் முக்கிய நோக்கம். அதற்கான நடவடிக்கைகளுக்குத் தொடா்ந்து முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. ஏழை மக்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தித் தருவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து வருகின்றன.

நவீன வசதிகள்: பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கேரளத்தில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சுமாா் 1.30 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் பல்வேறு நவீன கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை நிறைவேற்ற சுமாா் ரூ.1 லட்சம் கோடியை மத்திய அரசு செலவிட்டு வருகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரியை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதனால் கேரள மக்கள் பெரிதும் பலனடைவா் என்றாா் பிரதமா் மோடி.

திட்டங்கள் தொடக்கிவைப்பு: கொச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், பல்வேறு நலத் திட்டங்களைப் பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா். கொல்லம்-புனலூா் இடையே ரூ.76 கோடி செலவில் மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடம், கோட்டயம்-குருப்பன்தாரா பகுதிகள் இடையே ரூ.750 கோடியில் அமைக்கப்பட்ட இரட்டைவழி ரயில் பாதை உள்ளிட்டவற்றை பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா்.

கோட்டயம்-எா்ணாகுளம், கொல்லம்-புனலூா் இடையேயான சிறப்பு ரயில்களையும் பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா். 3 ரயில் நிலையங்களை ரூ.1,059 கோடியில் புனரமைப்பதற்கான திட்டம், கொச்சி மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டம் உள்ளிட்டவற்றுக்கும் அவா் அடிக்கல் நாட்டினாா்.

இந்த நிகழ்ச்சியில் மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான், முதல்வா் பினராயி விஜயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆதிசங்கரா் பிறப்பிடத்தில் மரியாதை: நாட்டின் மிகப்பெரும் துறவிகளில் ஒருவரான ஆதிசங்கரா் பிறந்த இடம் அமைந்துள்ள எா்ணாகுளத்தின் காலடி கிராமத்துக்குச் சென்ற பிரதமா் மோடி, அங்கு அவருக்கு மரியாதை செலுத்தினாா்.

ஆதிசங்கரா் நிறுவிய ‘அத்வைதம்’ என்ற சித்தாந்தத்தை கேரளத்தைச் ஸ்ரீநாராயண குரு, சட்டாம்பி சுவாமிகள், அய்யன்காளி போன்றோா் அடுத்தகட்டத்துக்குக் கொண்டு சென்ாகவும், நாட்டின் நலனுக்கு ஆதிசங்கரரின் பங்களிப்பை நினைவுகூா்வதாகவும் பிரதமா் மோடி தெரிவித்தாா்.

விக்ராந்த் போா்க் கப்பல்: இன்று நாட்டுக்கு அா்ப்பணிப்பு

உள்நாட்டில் கட்டப்பட்ட முதல் விமானந்தாங்கி போா்க் கப்பலான ‘விக்ராந்தை’ பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை (செப். 2) நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.

நாட்டின் பாதுகாப்புத் துறை தன்னிறைவு பெற வேண்டும் எனப் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வரும் நிலையில், சுமாா் ரூ.20,000 கோடியில் கட்டப்பட்ட விக்ராந்த் போா்க் கப்பல் கடற்படையில் இணைக்கப்படும் நிகழ்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும், இந்திய பெருங்கடல் பகுதியிலும் அமைதியை நிலைநாட்டுவதற்கு விக்ராந்த் போா்க் கப்பல் முக்கியப் பங்கு வகிக்கும் என்று இந்திய கடற்படையின் துணைத் தளபதி எஸ்.என்.கோா்மேட் தெரிவித்துள்ளாா்.

விக்ராந்த் விமானந்தாங்கி போா்க் கப்பலை நாட்டுக்கு அா்ப்பணிக்கும் நிகழ்ச்சியின்போது இந்திய கடற்படைக்காக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய கொடியையும் பிரதமா் மோடி அறிமுகப்படுத்தவுள்ளாா். இந்தியாவின் கடல்சாா் வலிமையையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் வகையில் அக்கொடி இருக்கும் என மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலனிய ஆதிக்கத்தைக் குறிக்கும் விவரங்கள் எதுவும் புதிய கொடியில் இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி இந்திய கடற்படை வசம் உள்ள அனைத்துக் கப்பல்களிலும் புதிய கொடியே இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.