ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் செகுந்தராபாத் அருகே உள்ள மின்சார பைக் விற்பனையகத்தில் நேரிட்ட தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 7 பேர் பலியாகினர். ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
பைக் விற்பனையகத்துக்குள் திடிரென பற்றிய தீ மற்றும் கரும்புகையில் அங்கிருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர்.
பல்வேறு வணிக நிறுவனங்கள் இயங்கி வந்த அந்த பல அடுக்குமாடிக் கட்டடத்தில் தீ விபத்து நேரிட்டபோது, அங்கிருந்த தங்கும் விடுதியில் 25 முதல் 30 பேர் வரை தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் சிலர் கட்டடத்துக்குள் சிக்கிக் கொண்டனர். இவர்களில் 7 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்தினர். 7 பேரை மீட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
தீ விபத்து நேரிட்டபோது, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கட்டடத்திலிருந்து சிலர் குதித்த விடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.