மத்தியப் பிரதேசத்தில், சிவிங்கிப் புலிகளை குனோ தேசிய பூங்காவில் திறந்துவிடும் நிகழ்ச்சிக்காக பிரதமா் நரேந்திர மோடியின் வருகையின்போது வனப்பகுதியில் ஏராளமான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக வெளியான ஊடக புகைப்படத்தையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பிரசாந்த் பூஷண், பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டருக்கு இறங்குதளம் அமைக்கவும், குனோ வனவிலங்குகள் சரணாயலத்தில் 8 சிவிங்கிப் புலிகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து விடும் நிகழ்ச்சியை நேரடியாகக் கண்டுகளிக்க வந்திருந்த 300 முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்குத் தேவையான வசதிகளைச் செய்யவும் மத்தியப் பிரதேச மாநிலம் குனோ வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்த அதிகளவிலான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. இயற்கையைப் பாதுகாப்பதில் மோடியின் அளவுக்கு அதிகமான அன்பு வெளிப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார்.
நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 5 பெண் சிவிங்கிப் புலிகள் மற்றும் 3 ஆண் சிவிங்கிப் புலிகள், பிரதமா் மோடியால் மத்திய பிரதேச மாநிலம், குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டன.
‘சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதன் மூலம் சூழலியல் தவறுகளை இந்தியா சரிசெய்கிறது’ என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் குறிப்பிட்டிருந்தார்.
உலகிலேயே வேகமாக ஓடக் கூடிய உயிரினமான சிவிங்கிப் புலிகள், ஒரு காலத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன. ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளை ஆண்ட அரசா்கள், ஆங்கிலேய ஆட்சியாளா்கள் உள்ளிட்டோா் பொழுதுபோக்குக்காக அவற்றை பெருமளவில் வேட்டையாடியதால், சிவிங்கிப் புலிகளின் இனமே இந்தியாவில் அழிந்து போனது.
நாட்டில் கடைசியாகக் காணப்பட்ட சிவிங்கிப் புலி, இன்றைய சத்தீஸ்கா் பகுதியில் கடந்த 1947-இல் கண்டறியப்பட்டது. இந்தியாவில் இந்த இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாக கடந்த 1952-இல் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.