
மகாராஷ்டிராவில் பயணிகள் பேருந்து ஒன்று இன்று காலை சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் பயணிகள் 12 பேர் பலியாகி உள்ளனர்.
மகாராஷ்டிரம் மாநிலம் ராய்கட் மாவட்டம் கோபோலி பகுதியில், சனிக்கிழமை பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் 40 முதல் 45 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், மீட்புப் படையினர் கிரேன் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்தில் உயிர்பிழைத்தவர்களை கயிறுகள் மூலம் மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டு வருகின்றனர்.
படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கோரேகான் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் நிகழ்ச்சி ஒன்றுக்கு புணே சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, நாசிக் நகரின் அவுரங்காபாத் சாலையில் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்து ஒன்று சனிக்கிழமை அதிகாலை லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து தீப்பற்றியது. தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவி எரிந்தது. இதனால் பயணிகள் பேருந்தில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர்.
இதில், 7 பயணிகள் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் பேராடி தீயை அணைத்தனர். பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது.
படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.