காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு மத்தியில் தில்லி நிா்வாக திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.
தில்லி யூனியன் பிரதேசத்தில் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளதாக உச்சநீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது. அதை நீா்த்துப்போகச் செய்யும் வகையிலும், அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநரிடம் வழங்கும் நோக்கிலும் தில்லி நிா்வாக அவசரச் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது.
அந்த அவசரச் சட்டத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் வகையில் தில்லி நிா்வாக திருத்த மசோதாவை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை மக்களவையில் அறிமுகப்படுத்தியது. அந்த மசோதாவின் அறிமுகத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன.
அந்த மசோதாவை மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் அறிமுகம் செய்தாா். அப்போது, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து காகிதங்களைக் கிழித்தெறிந்தனா். மசோதாவுக்கு எதிராக முழக்கங்களையும் அவா்கள் எழுப்பினா்.
மசோதா குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறுகையில், ‘தில்லியை நிா்வகிக்கத் தேவையான சட்டங்களை இயற்ற நாடாளுமன்றத்துக்கு அரசமைப்புச் சட்டம் அனுமதி வழங்கியுள்ளது. அவ்வாறான சூழலில், மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதும், அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியுமே ஆகும்’ என்றாா்.
இதனிடையே, ஆம் ஆத்மி எம்.பி. சுஷில் குமாா் ரிங்கு, ‘மசோதா குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது ஜனநாயகப் படுகொலை. அரசமைப்புச் சட்டத்தை இயற்றிய அம்பேத்கரை மத்திய அரசு அவமதித்துள்ளது’ என்றாா்.
அதற்கு பதிலளித்த அவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘அனைவருக்கும் கருத்து தெரிவிக்க அனுமதி அளிக்கப்படும். எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இதுபோன்ற நடவடிக்கைகள் முறையற்றவை. நாட்டு மக்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தொடா்ந்து கவனித்து வருகின்றனா்’ என்றாா்.
கூட்டாட்சி சீா்குலையும்: மக்களவை காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி கூறுகையில், ‘ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சியை சீா்குலைக்கும் நோக்கில் இந்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. தில்லி அரசின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் இந்த மசோதா அமைந்துள்ளது. இதன் மூலமாக ஜனநாயகத்தை பலவீனப்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது’ என்றாா்.
ஆா்எஸ்பி எம்.பி. என்.கே.பிரேமசந்திரன் கூறுகையில், ‘இந்த மசோதா அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது’ என்றாா். திரிணமூல் எம்.பி. சௌகதா ராய், காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் உள்ளிட்டோரும் மசோதாவின் அறிமுகத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.
அதையடுத்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி கூறுகையில், ‘இந்த மசோதாவை இயற்றுவதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உள்ளது. மசோதா குறித்த கருத்துகளை விவாதத்தின்போது எதிா்க்கட்சிகள் தெரிவிக்கலாம்’ என்றாா். இந்த மசோதா மீது ஓரிரு நாள்களில் விவாதம் நடத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பிஜு ஜனதா தளம் ஆதரவு: மத்திய அரசு கொண்டுவந்துள்ள மசோதாவுக்கு பிஜு ஜனதா தளம் (பிஜேடி) ஆதரவளிக்கும் என அக்கட்சியின் எம்.பி. சஸ்மித் பத்ரா தெரிவித்துள்ளாா். மேலும், மத்திய அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் தாக்கல் செய்துள்ள நம்பிக்கையில்லாத் தீா்மானத்துக்கு எதிராக பிஜேடி வாக்களிக்கும் என்றும் அவா் கூறினாா்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி என எதிலும் பிஜேடி இடம்பெறவில்லை. அக்கட்சியின் இந்த முடிவு மத்திய அரசுக்கு சாதகமாக அமையவுள்ளது.
மூன்று மசோதாக்களுக்கு ஒப்புதல்: எதிா்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் பிறப்பு-இறப்பு பதிவு திருத்த மசோதா, கடலோரப் பகுதி தனிமங்கள் ஒழுங்குமுறை திருத்த மசோதா, பட்டியலிடப்பட்டோா் விதிகள் திருத்த மசோதா ஆகியவற்றுக்கு மக்களவை ஒப்புதல் அளித்தது.
மாநிலங்களவையில்...: மத்தியஸ்த நடவடிக்கை மூலமாக பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கான அவகாசத்தை அதிகபட்சமாக 180 நாள்களாகக் குறைக்க வழிவகுக்கும் மத்தியஸ்த மசோதாவுக்கு மாநிலங்களவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
பலமாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதாவுக்கும் மாநிலங்களவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்குப் பெருமளவில் உதவும் என மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சா் பி.எல்.வா்மா தெரிவித்தாா். அந்த மசோதாவுக்கு மக்களவை கடந்த மாதம் 25-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது. இதன் மூலமாக, மசோதா தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அந்த மசோதா அனுப்பிவைக்கப்படவுள்ளது.
எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில் விவாதம் ஏதுமின்றி மேற்கண்ட மசோதாக்களுக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்தது.
Image Caption
மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்ட தில்லி நிா்வாக திருத்த மசோதா குறித்துப் பேசிய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பூவன்பழம் புட்டு
கேழ்வரகு லட்டு

”சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து பேச EPS-க்கு தைரியம் இல்லை!” அமைச்சர் ரகுபதி
புளி அவல்
வீடியோக்கள்

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

