நீங்கள் கடையில் வாங்கும் மருந்துப் பொருள்கள் தரமானதா அல்லது போலியானதா என்பதைக் கண்டறிய புதிய வசதி வருகிறது.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அதிகம் விற்பனையாகும் மருந்துகளின் லேபிள்கள் மீது க்யூஆர் கோடு(QR Code) பிரிண்ட் செய்யப்பட்டு இருக்கும். அந்த க்யூஆர் கோட்டை ஸ்கேன் செய்யும் போது, அதில் உற்பத்தி உரிமம் மற்றும் தொகுதி எண் உள்ளிட்ட முக்கிய விவரங்களை கொண்டு மருந்துப் பொருளின் அங்கீகாரத்தை தெரிந்து கொள்ளலாம்.
போலி மற்றும் தரமற்ற மருந்துப் பொருள்களின் விற்பனையைத் தடுக்கவும், தரத்தை உறுதிப்படுத்தவும் இந்த க்யூஆர் கோட் வசதியை கொண்டுவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்டமாக நாட்டில் அதிகம் விற்பனையாகும் 300 மருந்துப் பொருள்களின் லேபிள்கள் மீது க்யூஆர் கோடு பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்துப் பொருள்களின் விற்பனை மதிப்பு ரூ.50,000 கோடியாகும்.
நோய் எதிர்ப்பு மாத்திரைகள், இதய நோய் மாத்திரைகள், வலி நிவாரண மாத்திரைகள், நீரிழிவு எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகளில் இந்த க்யூஆர் கோட் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் போலி மருந்துகள் பெருமளவில் சந்தைகளில் கண்டெடுக்கப்பட்டன. அண்மையில் தைராய்டு பிரச்னைக்கும் க்ளென்மார்க் நிறுவனத்தின் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகளும் போலியாக உற்பத்தி செய்யப்பட்டு சந்தைகளில் விற்பனையானது பல்வேறு மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தடுக்க முதன்மை லேபிள்கள் மீது க்யூஆர் கோடு பிரிண்ட் செய்ய வேண்டும் எனவும், போதிய இடமில்லை எனில் இரண்டாம் நிலை லேபிள்கள் மீது க்யூஆர் கோடு பிரிண்ட் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.