மத்தியப் பிரதேசத்தில் தேநீர் போட்டுத்தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியின் கழுத்தை அறுத்துக்கொன்ற சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தின் ததிபூர் பகுதியில் வசித்துவரும் மோஹித் என்பவருக்கும் சாதனாவுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
காவல் துறையினர் அளித்த தகவலின்படி, கோயிலுக்குச் செல்ல மனைவி அவசர அவசரமாக புறப்பட்டுள்ளார். அப்போது தேநீர் போட்டுத்தர கணவர் வற்புறுத்தியுள்ளார். மனைவி இதற்கு மறுத்ததால், கணவன் - மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த கணவன், மனைவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் கணவனை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் இந்த உண்மைகள் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மனைவியின் வீட்டார், சாதனா மீது சந்தேகம் கொண்டு மோஹித் அடிக்கடி தொந்தரவு அளித்ததாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினர் விரிவான விசாரணை மேற்கொண்டுள்ளனர்.