மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு அறிமுகப்படுத்திய சன்சார் சாதி என்ற இணையதளம் மூலம் நாடு முழுவதும் திருட்டுபோன 7.25 லட்சம் செல்போன்கள் முடக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் அந்தந்த மாநில அரசுகளின் சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு இணைந்து கடந்த மே மாதம் ceir.sancharsaathi.gov.in என்ற இணையதளத்தை அறிமுகம் செய்திருந்தது.
இதுவரை திருடப்பட்ட செல்போன்களில் இருக்கும் சிம்கார்டுகள் மட்டும் முடக்கப்பட்டு வந்த நிலையில் செல்போனை முடக்கும் புதிய வசதி இதன் மூலம் பொதுமக்களுக்குக் கிடைத்தது.
மத்திய அரசின் சாதன அடையாள பதிவின் (சிஇஐஆர்) மூலமாக திருடுப்போன செல்போன்களை இணையதளம் வாயிலாக முடக்கலாம். அதுபோல யார் பெயரில் எத்தனை சிம்கார்டுகள், செல்போன்கள் இருக்கின்றன என்பதையும் இந்த இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஒரு முடக்கப்பட்ட செல்போனில் புதிய சிம்கார்டு நுழைத்ததும் காவல்துறை, புகார் அளித்தவர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும். செல்போன் நிறுவனத்துக்கும் எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.
பழைய செல்போன்களை வாங்கும் போது, அதன் ஐஎம்இஐ எண் மூலம், அது எந்த அளவுக்கு பழைய செல்போன், திருடப்பட்டதா என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளம் வாயிலாக இதுவரை 7.25 லட்சம் செல்போன்கள் முடக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் வாயிலாக திருடப்பட்ட செல்லிடப்பேசிகளை அதிகளவில் கண்டுபிடித்த மாநிலமாக தெலங்கானா உள்ளது. அங்கு இதுவரை 5 ஆயிரம் செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் கர்நாடகமும், ஆந்திரமும் உள்ளன.