இந்தியாவின் எதிர்காலம் குறித்து காங்கிரஸ் கட்சியிடம் எந்த திட்டங்களும் இல்லை என்று பிரதமர் மோடி மக்களவையில் விமர்சித்துள்ளார்.
மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் மூன்றாவது நாளாக இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தற்போது நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பதிலுரை அளித்து வருகிறார்.
அதில் அவர் பேசுகையில்,
எங்கள் அரசு மீது நாட்டு மக்களின் நம்பிக்கை மீண்டும் காட்டப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. இது கடவுளின் ஆசீர்வாதம் என்று நான் நம்புகிறேன். நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு எனது நன்றியை தெரிவிக்கவே நான் இங்கு வந்துள்ளேன்.
எதிர்க்கட்சிகள் கடந்த மூன்று நாள்களாக என்னை மிகவும் மோசமாக விமர்சித்து வருகின்றனர். பாஜகவிடம் என்ன கேள்வி கேட்க வேண்டும், எப்படி கேட்க வேண்டும் என்பது கூட எதிர்க்கட்சிகளுக்கு தெரியவில்லை. நாடு வளர்சியடைவது எதிர்க்கட்சிகளுக்கு பதற்றத்தை கொடுக்கிறது.
காங்கிரஸிடம் தெளிவான தேர்தல் வியூகம் இல்லை. இந்தியாவின் எதிர்காலம் குறித்து காங்கிரஸ் கட்சியிடம் எந்த திட்டங்களும் இல்லை. காங்கிரஸில் தொலைதூரப் பார்வை கொண்ட தலைவர்கள் கிடையாது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நாட்டின் வறுமை உச்சத்தில் இருந்ததாகவும், கடின உழைப்பின் மீது காங்கிரஸுக்கு நம்பிக்கை கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், எல்ஐசி குறித்தும் எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்தார்கள்; ஆனால் தற்போது எல்ஐசி சிறப்பாக இயங்குகிறது. HAL, LIC நிறுவனங்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றன.
2028-ல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும்போது இந்தியா பொருளாதாரத்தில் 3வது இடத்தில் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.