நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஜூலை 20ல் தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடரில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் பெரும்பாலான நாள்கள் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.
கடும் அமளிக்கு இடையே தில்லி சட்டத்திருத்த மசோதா, வன சட்ட திருத்த மசோதா, தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
மேலும் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது கடந்த மூன்று நாள்களாக மக்களவையில் விவாதம் நடைபெற்றது. நேற்று(வியாழக்கிழமை) மாலை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதில் அளித்துப் பேசினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மக்களவையில் மூன்று முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்தார்.
இதையடுத்து இன்று மாலை இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.