பெங்களூரு (கர்நாடகா): பிரபல கன்னட நடிகரும், உத்தம பிரஜாகிய கட்சியின் தலைவருமான உபேந்திரா மீது, எஸ்சி மற்றும் எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் நேரடி அரட்டை நிகழ்ச்சியின் போது எஸ்சி மற்றும் எஸ்டி சமூகத்திற்கு எதிராக சாதிவெறிக் கருத்துகளை தெரிவித்ததாக கன்னட நடிகர் உபேந்திரா மீது இரண்டாது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நடிகர் உபேந்திரா, சமூக வலைதளங்களில் நேரடி அரட்டை நிகழ்ச்சியின் போது, எஸ்சி மற்றும் எஸ்டி சமூகத்திற்கு எதிராக சாதிவெறிக் கருத்துகளையும், சாதி, மத உணர்வை சீர்குலைக்கும் வகையிலும், அவர்களது உணர்வுகளை புண்படுத்தும் விதமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | நீட் தேர்வு: தற்கொலை செய்து கொண்ட மாணவனின் தந்தையும் தற்கொலை
இது குறித்து சமூக நலத்துறை உதவி இயக்குநர் மதுசூதன், சி.கே.அச்சுகாட்டு காவல்நிலையத்தில் அளித்த புகாரில், நடிகர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதையடுத்து நடிகர் உபேந்திரா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், கன்னட ஆதரவு அமைப்பின் தலைவர் பைரப்பா ஹரிஷ் குமார் அளித்த புகாரின் பேரில், அல்சூர் கேட் காவல் நிலையத்தில் உபேந்திரா மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.