புதுதில்லி: தில்லி பல்கலைக்கழகத்தில் ராகிங் முற்றிலும் இல்லை என்று துணைவேந்தர் யோகேஷ் சிங் தெரிவித்தார். அதே வேளையில் பல்கலைக்கழகத்தின் 2023-24 அமர்வு இன்று முதல் தொடங்கியது.
இதில் இளங்கலை படிப்புகளில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த யோகேஷ் சிங், எந்த கவலையும் இல்லாமல் அந்தந்த துறை சார்ந்த வளாகங்களுக்கு செல்லுமாறு அழைப்பு விடுத்தார்.
மேலும், மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்த கல்லூரிகளுக்கு வருவது மிகவும் இனிமையான அனுபவம் என்றார்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை பொது இட ஒதுக்கீட்டு முறையின் 2-வது சுற்று முடிவில் 64,288 மாணவர்கள் சேர்க்கையை உறுதிப்படுத்தியதாக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
முதல் மற்றும் இரண்டாம் சுற்றுகளில் 1,05,426 மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில், பல்கலைக்கழகத்தில் ராகிங் முற்றிலும் இல்லை என்று புதியவர்களுக்கு உறுதியளித்தார் யோகேஷ் சிங். எந்தவொரு அசம்பாவிதத்தையும் தவிர்க்க மூத்த மாணவர்கள் இளைய மாணவர்களை மதிக்கவும், அவர்களை உடன்பிறப்புகளைப் போல நடத்தவும் அழைப்பு விடுத்தார்.
பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் பெண்களின் சேர்க்கை சதவிகிதம் பாதிக்கும் மேல் உள்ளது ஒரு இனிமையான அம்சம் என்ற நிலையில், தில்லி பல்கலைக்கழக கல்லூரிகளில் பெண்கன் 53 சதவிகிதமும், ஆண்களின் எண்ணிக்கை 47 சதவிகிதமாக உள்ளது.