ஹிமாசலப் பிரதேச வெள்ள பாதிப்பு நிவாரண உதவியாக அம்மாநிலத்துக்கு தேசிய பேரிடர் நிதியிலிருந்து மத்திய அரசு ரூ.200 கோடி விடுவிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: முன்னதாக மத்திய அரசு ரூ.360.80 கோடியை இரண்டு தவணையாக ஜூலை 10 மற்றும் ஜூலை 17 ஆகிய தேதிகளில் விடுவித்தது. அதேபோல மத்திய அரசு ஹிமாசலுக்கான கடந்த கால நிவாரணத் தொகையான ரூ.189.27 கோடியயும் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி விடுவித்துள்ளது. இந்த நிவாரண நிதியைப் பயன்படுத்தி கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை மாநில அரசு மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: லூனா 25 விண்கலம் விழுந்து நொறுங்கியது: ரஷியா
ஹிமாசலின் பல மாவட்டங்களும் கடந்த சில நாள்களாக கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றுக்கு இதுவரை ஹிமாசலில் 330 பேர் உயிரிழந்துள்ளனர். ஹிமாசலின் அனைத்து மாவட்டங்களும் கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் மாநிலத்தில் 25 நிலச்சரிவு சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.
ஹிமாசலில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை மத்தியக் குழு கடந்த ஜூலை 19 முதல் ஜூலை 21 வரை பார்வையிட்டு மதிப்பீடு செய்தது குறிப்பிடத்தக்கது.