தில்லியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்ட அரசு அதிகாரி மற்றும் அவரது மனைவிக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் அளித்து தில்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் துணை இயக்குநராக இருந்த பிரமோதய் காக்கா(Premoday Khakha), இறந்த தனது நண்பரின் மகளை 2020-21 ஆம் ஆண்டில் பல மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கர்ப்பமடைந்த சிறுமிக்கு கருக்கலைப்புக்கான மாத்திரைகளை அவரது மனைவி வழங்கியதாக புகார் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக பிரமோதய் காக்கா, மனைவி சீமா ராணி ஆகிய இருவரையும் கடந்த திங்கள்கிழமை போலீசார் கைது செய்த நிலையில் இன்று(புதன்கிழமை) தில்லியின் திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். போக்ஸோ சட்டத்தின் கீழ் இருவருக்கும் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் விசாரணை முடிவடையும்வரை, குற்றம்சாட்டப்பட்ட பிரமோதய் காக்காவை இடைநீக்கம் செய்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.