தில்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் வளா்ந்த, வளரும் நாடுகள் இடம்பெற்றுள்ள ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகித்து வருகிறது. சிகர நிகழ்வான ஜி20 உச்சி மாநாடு, தில்லியில் வரும் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
அமெரிக்கா, சீனா, ரஷியா உள்ளிட்ட உலகின் முக்கிய நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கவிருப்பதால், இந்த மாநாடு பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்க மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக பிரதமர் லீ கியாங் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே பிரதமர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்ட ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், மாநாட்டில் பங்கேற்க இயலாது என்றும் அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் கலந்து கொள்வார் என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
மேலும், இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.