அமலாக்கத்துறை, ஜம்மு காஷ்மீர் கூட்டுறவு வங்கித் தலைவரை ரூ.250 கோடி பண மோசடி செய்த வழக்கில் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
கூட்டுறவு வங்கியின் தலைவர் முகமது ஷாஃபி தாரின் வீடு உள்பட அவருக்குத் தொடர்புடைய இடங்களில் வியாழன் முதல் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரிவர் ஜீலம் கூட்டுறவு வீடு கட்டுமான அமைப்பு என்கிற பொய்யான நிறுவனத்துக்கு ரூ.250 கோடி கடனாகக் கொடுத்த குற்றச்சாட்டில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளதால் முகமது ஷாஃபியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், ரிவர் ஜீலம் வீடு கட்டுமான கூட்டுறவு அமைப்பின் தலைவர் முகமது ஹிலால் ஏ மிரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் ஊழல் தடுப்புப் பிரிவு 2020 ஆகஸ்ட்டில் இந்த ஊழலைக் கண்டறிந்து தகவலறிக்கையைப் பதிவு செய்தது.
குற்றம் சுமத்தப்பட்ட அமைப்புக்கு முறையான அனுமதியோ கூட்டுறவு சங்கப் பதிவோ வருமான வரி கணக்கோ கூட இல்லாத நிலையிலும் அந்த அமைப்பு சார்பில் வங்கியில் கோரப்பட்ட ரூ. 300 கோடிக்கான கடனை ஜம்மு காஷ்மீர் கூட்டுறவு வங்கி வழங்கியதே இந்த வழக்கிற்கான அடிப்படை.
இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.