கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி மக்களவையில் திங்கள்கிழமை ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.
கத்தாரின் டோஹாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேர் அந்நாட்டை உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர்.
அதையடுத்து கத்தார் நீதிமன்றம் அவர்கள் எட்டு பேருக்கும் மரண தண்டனை விதித்து சமீபத்தில் தீர்ப்பளித்தது.
இதையும் படிக்க: மிசோரம் யாருக்கு? முன்னணியில் சோரம் மக்கள் இயக்கம்!
ஆனால் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பின் விவரங்கள் கூட வெளியிடப்படாமல் அந்நாட்டு அரசால் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவர்களின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் 8 பேரையும் மீட்பதற்கு அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளும் என்று உறுதியளித்திருந்தார்.
கத்தார் அரசு விசாரணை நடவடிக்கைகள் மற்றும் தீர்ப்பு விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்காமல், ரகசியமாக வைத்திருப்பது குறித்து கடந்த மாதம் கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி தற்போது நாடாளுமன்ற மக்காவையில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.