ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கு விசாரணையை டிசம்பர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மசூதி உள்ள இடத்தில் கோவில் கட்டக் கோரிய வழக்கினை எதிர்த்து, ஞானவாபி மசூதி நிர்வாகக் குழு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை அலகாபாத் உயர் நீதிமன்றம் டிசம்பர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
முன்னதாக, ஆகஸ்ட் 28 தேதி வெளியிடப்பட்ட உத்தரவின் மூலம், அப்போதைய தலைமை நீதிபதி பிரிதிங்கர் திவாகர், இந்த வழக்கை நீதிபதி பிரகாஷ் பாடியாவிடம் இருந்து தனது அமர்விற்கு மாற்றிக் கொண்டார்.
இதையும் படிக்க | மணிப்பூரில் 7 மாதங்களாக தொடரும் வன்முறை: மல்லிகார்ஜுன கார்கே
வழக்குகளைப் பட்டியலிடுவதில் நீதித்துறையின் வெளிப்படைத்தன்மை கருதி, இந்த வழக்கை தனி நீதிபதி அமர்வில் இருந்து தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றுவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக தலைமை நீதிபதி திவாகர் அப்போது தெரிவித்தார்.
தலைமை நீதிபதி திவாகர் கடந்த நவம்பர் 22-ஆம் தேதி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை நீதிபதி ரஞ்சன் அகர்வால் முன் பட்டியலிடப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி ரஞ்சன் உத்தரவிட்டார்.
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி அமைந்துள்ள ஞானவாபி மசூதியானது, அரசா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில் கோயிலின் ஒரு பகுதியை இடித்து கட்டப்பட்டதாக சில ஹிந்து அமைப்புகளின் தரப்பில் கூறப்படுகிறது.