இந்தியா வந்துள்ள கென்ய அதிபர் வில்லியம் ரூடோவை பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா சந்தித்துப் பேசினார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அழைப்பின்பேரில், கென்ய அதிபர் வில்லியம் ரூடோ டிசம்பர் 4 முதல் 6-ஆம் தேதி வரை மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
திங்கள்கிழமை முதல் வில்லியம் ரூடோ இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.
இதையும் படிக்க | 'இந்தியா' கூட்டணியினர் ஒற்றுமையாக உள்ளோம்: சஞ்சய் ரௌத்
இந்நிலையில் புதுதில்லியில் உள்ள கென்ய அதிபர் வில்லியம் ரூடோவை பாஜகவின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று (டிச.6) காலை சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து ஜெ.பி.நட்டா எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “இன்று கென்ய அதிபர் வில்லியம் ரூடோவை சந்தித்து பாஜகவின் கொள்கைகள், கட்சியின் முன்னெடுப்புகள் குறித்து விளக்கினேன். கென்யாவின் ஆளும் கட்சியான யுடிஏ மற்றும் பாஜக இடையிலான தொடர்புகளை மேம்படுத்த இருவரும் ஒப்புக்கொண்டோம். மேலும் அவரது கட்சியின் பிரதிநிதியை இந்தியா வருவதற்கு அழைப்பு விடுத்துள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.
கென்யாவின் அதிபராக ரூடோ பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு முதன்முறையாக வந்துள்ளார். ஜி-20 கூட்டமைப்பில் 55 நாடுகளை உறுப்பினா்களாக கொண்ட ஆப்பிரிக்க ஒன்றியம் இணைக்கப்பட்டு 3 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அதிபா் ரூடோ இந்திய பயணம் மேற்கொண்டுள்ளார். ஆறு ஆண்டுகளுக்கு பின் கென்யாவின் அதிபா் ஒருவா் இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ராஜஸ்தானில் முழு அடைப்பு நடத்த ராஜ்புத் அமைப்புகள் அழைப்பு!