ஆந்திரத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தோடு இன்று வழிபாடு மேற்கொண்டார்.
2004 முதல் 2009 வரையில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் இருந்தபோது, ரயில்வேயில் பணி நியமனம் தொடர்பாக லஞ்சம் பெற்ற வழக்கில், கைது செய்யப்பட்ட லாலு, அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி ஆகியோருக்கு கடந்த அக்டோபர் மாதம் தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில், லாலு பிரசாத் யாதவ் தனது மனைவி, மகன் உள்பட குடும்பத்தினரோடு இன்று திருப்பதிக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். அதிகாலையில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் யாதவ் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பிரார்த்தனை செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, திருமண நாளான இன்று எனது குடும்பத்தினருடன் ஸ்ரீ திருப்பதி பாலாஜி கோயிலில் வணங்கி, தரிசனம் செய்ததன் மூலம் வேங்கடேச பெருமாளின் ஆற்றலையும், ஆசீர்வாதத்தையும் பெற்றேன்.
மாநில மக்களின் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு மற்றும் நலனுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்தோம் என்றும் அவர் கூறினார்.