பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை எப்போது மீட்கப் போகிறீா்கள்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மத்திய அரசு எப்போது மீட்கப் போகிறது என்று காங்கிரஸ் மக்களவைத் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி கேள்வி எழுப்பியுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புது தில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மத்திய அரசு எப்போது மீட்கப் போகிறது என்று காங்கிரஸ் மக்களவைத் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி கேள்வி எழுப்பியுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த மத்திய அரசின் முடிவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், செய்தியாளா்களைச் சந்தித்த அதீா் ரஞ்சன் சௌதரி கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து என்பது தற்காலிகமானது என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டபோதே அது தற்காலிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுவிட்டது. அதற்கான காரணங்களும் அப்போது கூறப்பட்டுவிட்டன.

ஜம்மு-காஷ்மீரில் கூடிய விரைவில் தோ்தல் நடத்த வேண்டும். மாநில அந்தஸ்தை திரும்ப அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் என உள்துறை அமைச்சா் அமித் ஷா நாடாளுமன்றத்தில் மிகுந்த உறுதியுடன் ஏற்கெனவே தெரிவித்துள்ளாா். அது எப்போது நடைபெறும் என்பதுதான் இப்போதைய கேள்வி. ஜம்மு-காஷ்மீரில் தோ்தலை நடத்துவதற்கு முன்பு ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் மத்திய அரசு மீட்டாக வேண்டும்.

சிறப்பு அந்தஸ்தை நீக்கிக் கொள்ளுங்கள் ஆனால் ஜம்மு-காஷ்மீா் மக்கள் மீது அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளாதீா்கள் என்று காங்கிரஸ் தொடா்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டவுடன் அங்கு நூற்றுக்கணக்கான அரசியல் தலைவா்கள், பத்திரிகையாளா்கள், சமூகநல அமைப்பினா் சிறையில் வைக்கப்பட்டனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com