மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிரான தனது மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மஹுவா மொய்த்ரா முறையிட்டுள்ளார்.
மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராகக் கேள்வி எழுப்ப, தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியது தொடா்பான குற்றச்சாட்டில் மக்களவை நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தி, தனது அறிக்கையை கடந்த நவ. 9-ஆம் தேதி வெளியிட்டது.
அதில், மஹுவா மொய்த்ராவைப் பதவிநீக்கம் செய்யப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் டிச. 8 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு குரல் வாக்கெடுப்பின் மூலமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிக்க | திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம்!
அதன்படி, மக்களவை உறுப்பினா் பதவியிலிருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம் செய்யப்பட்டாா்.
பின்னர், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார்.
தொடர்ந்து, தனது மனுவை விசாரிக்க இன்று(டிச. 13) அல்லது நாளை(டிச. 14) பட்டியலிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இன்று முறையிட்டார். டிசம்பர் 15 ஆம் தேதி முதல் உச்சநீதிமன்றத்திற்கு குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, மஹுவா மொய்த்ராவின் மனுவை பட்டியலிடுவது குறித்து தலைமை நீதிபதி சந்திரசூட் முடிவு செய்வார் என்று உச்சநீதிமன்றம் கூறியது.
தொடர்ந்து, மின்னஞ்சல் மூலமாக உடனடியாக முறையீடு செய்யுமாறும் தான் உடனடியாக அதுகுறித்து முடிவெடுப்பதாகவும் மஹுவா மொய்த்ரா தரப்புக்கு தலைமை நீதிபதி பதில் அளித்துள்ளார். அதன்படி, மஹுவா மொய்த்ராவில் மனு இன்று அல்லது நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.