வானைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ள அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றத்தைச் சுட்டிக்காட்டி, மோடியின் வாக்குறுதி என்பது பணவீக்கத்துக்கான வாக்குறுதி என காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
பணவீக்கத்தை மோடி ஆட்சி, கட்டுபடுத்தத் தவறிவிட்டதாகவும் அதை மறைக்க பல்வேறு பிரச்னைகளை எழுப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “மோடியின் வாக்குறுதி என்பது பணவீக்கத்துக்கான வாக்குறுதிதான். மோடியின் வாக்குறுதியை பாஜக ஆட்சி பின்பற்றி வருகிறது. மற்ற வாக்குறுதிகள் பற்றி தெரியவில்லை. ஆனால் 9 ஆண்டுகளாக இந்த ஒரு வாக்குறுதியை மட்டும் நாடு பார்த்து வருகிறது.
“தவறான அரசின் கொள்கைகளால், பணவீக்கம் 45 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
“அத்தியாவசிய பொருள்களின் விலை வானைத் தொடுமளவுக்கு உயர்ந்துவருகிறது.
”பொருள்களின் விலையேற்றத்தால் சில்லறை பணவீக்கம் 5.5 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது.
“பிரதமர் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியைச் சந்தித்துள்ளார். இதனை மறைக்க பல்வேறு பிரச்னைகளை உருவாக்கி வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தவறான பொருளாதார கையாளுகை, விலையேற்றம் மற்றும் அதிகரித்து வரும் வேலையின்மை குறித்து காங்கிரஸ், பாஜக மீது குற்றம் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.