கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுடன் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
தொலைவிலிருந்து வரும் பக்தர்களுக்காக கேரள அரசு மற்றும் திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அடுத்ததாக, சபரிமலையில் விமான சேவையும் தொடங்கப்பட உள்ளது.
சபரிமலை அருகே கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள எருமேலி செருவள்ளி எஸ்டேட்டில் அரசு, தனியார் பங்களிப்பில் 2,570 ஏக்கர் பரப்பளவில் ரூ.4,000 கோடியில் விமான நிலையம் கட்ட மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக, மத்திய விமான போக்குவரத்துத் துறை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், மாநில அரசு விமான நிலையம் அமையவுள்ள 2,570 ஏக்கருக்கான நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.
இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் அத்துமீறல்: கர்நாடகத்தில் மென்பொறியாளர் கைது
இதுகுறித்து பேசிய மாநில வருவாய்த்துறை அமைச்ச்சர் கே.ராஜன் , “சபரிமலை விமான நிலையத்துக்காக தனியார் மற்றும் அரசிற்கு சொந்தமான நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. வனத்துறையின் ஆய்வுக்கு உள்பட்ட இடங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட இருக்கின்றன. நிலம் வைத்திருப்பவர்களின் தகவல்களும் முழுமையாக ஆராயப்படும். இடதுசாரி ஜனநாயகத்தின் விருப்ப விளைவாகவே இந்த விமான நிலையம் கொண்டு வரப்படுகிறது.” எனக் கூறியிருக்கிறார்.