உத்தரப் பிரதேசம் ஹம்ரிப்பூரில் செல்போனில் ரீல்ஸ் பார்த்துவிட்டு அதைப்போலவே செய்ய முயன்ற 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐந்தாம் வகுப்பு படித்துவரும் சிறுவன், உயிர் காக்கும் செய்முறைகளை ரீல்ஸ்-ல் பார்த்துவிட்டு அதைப்போலவே செய்து பார்க்க முயன்று இறந்ததாக குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார். சிறுவன் தாய் கழுத்தில் போட்டுக்கொள்ளும் துணியைத் தனது கழுத்தில் இறுக்கிவிட்டு, அதிலிருந்து தப்பிக்க முயன்றுள்ளான்.
கட்டிலிருந்து வெளியே வர முடியாமல் கழுத்து இறுக்கப்பட்டு அச்சிறுவன் உயிரிழந்துள்ளான். கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் சிறுவனைக் கண்டுபிடித்த தாய் அவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: இஸ்லாமாபாத், ராவல்பிண்டியில் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!
பெற்றோர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காத நிலையில், சமூக வலைதளத்தின் மூலம் தகவலறிந்த காவல்துறையினர், குழந்தையின் உடலை உடற்கூராய்வுக்கு உட்படுத்த பெற்றொருக்கு அறிவுரை கூறினர்.
காவல்துறை நடத்திய விசாரணையில் சிறுவன் யூடியூப் அதிகம் பயன்படுத்துவதும், ஒரு சிறுவன் கைக்குட்டையால் தூக்கு போட்டுக் கொள்வதுபோல் நடித்து பின், எந்தக் காயமும் இல்லாமல் தப்பிப்பது போன்ற ரீலைக் கடைசியாகப் பார்த்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.