புது தில்லி: 75 வயதான முன்னாள் இந்திய காவல் பணி அதிகாரி, உளவு அமைப்புகளில் பணியாற்றியவர், ரயில் மோதி பலியாகியுள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரது ஓட்டுநர் தெரிவிக்கும் தகவலின்படி, ரயில் கடப்பதற்காக தடுப்பு போடப்படிருந்தபோது காரில் இருந்து இறங்கி தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார்.
மோகன் தாஸ் மேனன், 1974 பேட்சைச் சார்ந்த ஐபிஎஸ் அதிகாரி , இந்திய அரசின் உளவு அமைப்பான ரா மற்றும் புலனாய்வு அமைப்பு ஐபி ஆகியவற்றில் பணியாற்றியவர்.
தெற்கு தில்லியில் வசித்து வந்தவர் புதன்கிழமை ஒருவரின் இறுதி சடங்குக்குச் சென்றுவிட்டு திரும்பியுள்ளார். பிரார் ஸ்கொயர் பகுதியில் ரயில் தடுப்பு போடப்பட்டதைக் கவனித்துள்ளார்.
காரில் இருந்து இறங்கியவர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயிலில் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
அவருக்கு ரயில் வருகிற சத்தம் கேட்டிருக்காது எனச் சந்தேகப்படுகிறோம் எனக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.