இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், இந்திய மல்யுத்த சம்மேளத்தின் புதிய தலைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை பிரதமர் அலுவலகம் செல்லும் சாலையின் நடுவில் வைத்துவிட்டுச் சென்ற சம்பவம், மிகுந்த வருத்தமளிப்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 'இந்த நாட்டின் ஒவ்வொரு மகளுக்கும் சுயமரியாதை என்பதே முதன்மை, பதக்கங்களும் மற்ற பெருமைகளும் அதற்குப் பிறகுதான்' எனக் கூறியுள்ளார்.
மேலும், 'இந்தத் துணிச்சலான வீராங்கனைகளின் கண்ணீரை விட உங்களது 'பாகுபலி'யால் கிடைக்கும் அரசியல் பலன்கள் முக்கியமானதா?' எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதையும் படிக்க: பாஜகவின் பொய்கள் வலுவானவை: மல்லிகார்ஜூன் கார்கே
'பிரதமர்தான் இந்தியாவின் காப்பாளர். இத்தகையை கொடுமையில் அவருக்கும் பங்கிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது' எனப் பதிவிட்டுள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சிங், வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக வீரர், வீராங்கனைகள் குற்றம் சாட்டினர். மிகப்பெரிய அளவிலான போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இதைத்தொடர்ந்து இந்திய மல்யுத்த சம்மேளம் கலைக்கப்பட்டு, தற்போது நடைபெற்ற தேர்தலில் குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ் பூஷனின் நெருங்கிய நண்பர் மற்றும் ஆதரவாளரான சஞ்ஜய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கு பெரிய எதிர்ப்பு உருவானதால் புதிய சம்மேளமும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டது. அதற்கு தலைமையைத் தேர்ந்தெடுப்பதில் தகுந்த வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது காரணமாகக் கூறப்பட்டுள்ளது. தற்போது புதிய சம்மேளத்தை நிர்வகிக்க 3 பேர் கொண்ட குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது.