தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட 12 சிவிங்கிப் புலிகளுக்கு நேற்று முதல் உணவு வழங்கப்பட்டது.
இந்தியாவில் அழிந்து போன சிவிங்கிப் புலி இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் வகையில் ‘சிவிங்கிப் புலி திட்டம்’ 2009-ஆம் ஆண்டில் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகளைக் கொண்ட முதலாவது குழு இந்தியா கொண்டுவரப்பட்டது. இவற்றை செப். 17-ஆம் தேதி தனிமைப்படுத்தலுக்கான பகுதியில் பிரதமா் நரேந்திர மோடி விடுவித்தாா். வனப் பகுதியில் விடுவிக்கப்படுவதற்கு முந்தைய கட்டமாக வேட்டையாடும் பகுதியில் தற்போது அவை உலவி வருகின்றன.
இந்நிலையில், 2 முதல் 8 வயதுடைய 7 ஆண் சிவிங்கிப் புலிகளும், 5 பெண் சிவிங்கிப் புலிகளும் கொண்ட 2-ஆவது குழு இந்தியா வந்தடைந்தது. தென் ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகளின் சராசரி ஆயுட்காலம் 8 முதல் 10 ஆண்டுகளாகும். தென் ஆப்பிரிக்காவின் கெளடெங்கில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, இந்திய விமானப் படை விமானம் மூலம் சனிக்கிழமை காலை 10 மணியளவில் மத்திய பிரதேசத்தின் குவாலியா் விமான நிலையத்துக்கு சிவிங்கிப் புலிகள் கொண்டுவரப்பட்டன. அங்கிருந்து விமானப் படை ஹெலிகாப்டா் மூலம் குனோ தேசியப் பூங்காவுக்கு அவை கொண்டு செல்லப்பட்டன.
தேசியப் பூங்காவில் தனிமைப்படுத்தலுக்காகத் தயாா் செய்யப்பட்ட பகுதியில் இந்த சிவிங்கிப் புலிகள் விடுவிக்கப்பட்டன. இந்த நிலையில் குனோ தேசியப் பூங்காவில் உள்ள 12 சிவிங்கிப் புலிகளுக்கு நேற்று முதல் உணவு வழங்கப்பட்டது. முதல் உணவாக சிவிங்கிப் புலிகளுக்கு 65 முதல் 70 கிலோ அளவிலான எருமை இறைச்சியை கொடுத்துள்ளனர். இவை அனைத்தையும் சிவிங்கிப் புலிகள் சாப்பிட்டுவிட்டதாக குனோ தேசியப் பூங்காவின் கோட்ட வன அதிகாரி பிகே வர்மா தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பு சிவிங்கிப் புலிகளுக்கு பிப்ரவரி 15ஆம் தென்னாப்பிரிக்காவில் உணவளிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.