அசாமின் குவாஹாட்டியில் கணவர், மாமியாரை கொன்று துண்டுகளாக்கி குளிர்பதனப் பெட்டியில் வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தில்லியில் ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்குபோல, நெஞ்சை உருக்கும் சம்பவம் குவாஹாட்டியில் நடந்தேறியுள்ளது.
ஏழு மாதங்களுக்கு முன் குவாஹாட்டியின் நூன்மதி பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
நூன்பதி பகுதியில் கணவர் மற்றும் மாமியாருடன் வசித்து வந்தவர் பந்தனா கலிதா. ஆகஸ்ட் 17, 2022அன்று கலிதா தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து கணவர் அமர்ஜோதி, மாமியார் சங்கரியைத் திட்டமிட்டுக் கொன்றுள்ளார்.
கொலையைத் தொடர்ந்து, கணவர் மற்றும் மாமியாரின் உடலைத் துண்டு துண்டுகளாக்கி குளிர்பதனப் பெட்டியில் சேமித்துவைத்திருந்தார். பின்னர் நான்கு நாள்களுக்குப் பிறகு உடல் உறுப்புகளை மேகாலாயாவின் டாப்கி ஆற்றில் அப்புறப்படுத்தியுள்ளார். இது குவாஹாட்டியில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ளது.
ஆற்றில் உடல் உறுப்புகளைச் சேகரித்த காவல்துறையினர், கடந்த ஏழு மாதங்களாக விசாரணை மேற்கொண்ட நிலையில் கொலை செய்தவர் கலிதா என்று கண்டறிந்தனர்.
சம்பவத்தை அறிந்த அக்கம்பக்கத்தினர் கலிதா கடந்தாண்டு வீட்டைச் சுத்தம் செய்தபோது, வீட்டின் மொட்டை மாடியில் கணவர், மாமியாரின் துணிகளை எரித்ததைக் கண்டதாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கொலையில் ஈடுபட்ட கலிதாவின் நண்பர்களான அருப் தேகா மற்றும் தன்ஜித் தேகா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கலிதாவை கைது செய்து மாமியார் மற்றும் கணவரை எரித்ததற்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.
தில்லியில் ஷ்ரத்தா கொடூரமாக கொலை செய்யப்பட்டதைப் போன்று குவாஹாட்டியில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.