தில்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தின் முன்பு காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
தில்லியில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் செல்லும் இண்டிகோ விமானத்தில் இருந்து காங்கிரஸ் மூத்த செய்தித் தொடர்பாளர் பவன் கேராவை காவல்துறையினர் இறங்கச் சொன்னதால் இந்த போராட்டம் நடைபெற்று வருகின்றது.
பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பவன் கேரா மீது பாஜக அளித்த புகாரின் பேரில் அசாம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அசாம் காவல்துறையினர் கேட்டுக் கொண்டதன் பேரில் விமானத்திலிருந்து பவன் கேரா இறக்கி விடப்பட்டார்.
சத்தீஸ்கரில் நடைபெறும் தேசிய காங்கிரஸ் மாநாட்டுக்கு இதே விமானத்தில் செல்லவிருந்த 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பவன் கேராவுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து பவன் கேரா கூறுகையில், எனது பேக்கில் எதோ பிரச்னை இருப்பதாகக் கூறி என்னை இறங்கச் சொன்னார்கள். என்னிடம் பேக் இல்லை என்று கூறியவுடன் உங்களை பறக்க அனுமதிக்க முடியாது துணை காவல் கண்காணிப்பாளர் உங்களை காண வேண்டும் எனக் கூறி விமானத்தை விட்டு இறங்கச் சொன்னார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள் விமானத்தின் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களும், காவலர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.