இந்திய ஒற்றுமை நடைப்பயணம் காங்கிரஸ் கட்சிக்கு திருப்புமுனையாக இருந்ததாகவும், இந்த யாத்திரையுடன் தனது அரசியல் பயணம் நிறைவடைவதாகவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரின் நவராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்த மாநாட்டில் சோனியா பேசியதாகவது,
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் திறமையான தலைமையுடன் 2004 மற்றும் 2009ல் நாம் பெற்ற வெற்றி, எனக்குத் தனிப்பட்ட முறையில் திருப்தி அளிக்கிறது. ராகுலின் பயணத்துடன் எனது அரசியல் பயணம் நிறைவடைவது எனக்கு மகிழ்ச்சி. இந்த பயணம் காங்கிரஸ் கட்சிக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது.
இந்திய மக்கள் நல்லிணக்கம், சகிப்புத்தன்மை மற்றும் சமத்துவத்தை பெருமளவில் விரும்புகிறார் என்பதை நிரூபித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்ற அனைத்து தலைவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும், அவர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் சோனியா காந்தி நன்றி தெரிவித்தார். குறிப்பாகப் பயணத்தில் உறுதியையும், தலைமையையும் வகித்த ராகுலுக்கு நன்றி கூறுகிறேன் என்றார்.
ஒட்டுமொத்த நாட்டுக்கும் காங்கிரஸுக்கும் இது சவாலான நேரம். பாஜக, ஆர்.எஸ்.எஸ். சேர்ந்து நாட்டில் உள்ள நிறுவனங்களை நாசமாக்கி வருகின்றனர். கட்சித் தலைவர்கள் தனிப்பட்ட எதிர்பார்ப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தியாகங்களைச் செய்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.