காஷ்மீரில் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்க பாஜக அரசு தவறிவிட்டதென மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பொது மக்களில் ஒருவரை தீவிரவாதி துப்பாக்கியினால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சய் சர்மா என்பவர் தனது மனைவியுடன் சந்தைக்கு செல்லும் வழியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவரை மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சைப் பலனின்றி இறந்து விட்டார். தற்போது அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து காஷ்மீர் டிஐஜி கூறுகையில், “இந்த சம்பவம் காலை 10.30 மணியளவில் நடந்தது. தனது மனைவியுடன் சந்தைக்கு சென்றுகொண்டிருந்தவரை தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டுள்ளார். தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளோம். விரைவில் தீவிரவாதிகளை முடக்குவோம்” என்றார்.
இது சம்பவம் குறித்து மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி கூறியதாவது:
"அது ஹரியாணாவாக இருந்தாலும் சரி, காஷ்மீராக இருந்தாலும் சரி இதுமாதிரி சம்பவம் எங்கு நடந்தாலும் பாஜகவுக்கு மட்டும்தான் உதவியாக இருக்கும். காஷ்மீரில் சிறுபான்மையினர்களைப் பாதுகாக்க பாஜக அரசு தவறிவிட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்புநிலையைக் காட்டுவதற்காக மட்டுமே சிறுபான்மையினரைப் பயன்படுத்துகின்றனர்."