எல்லையில் சீனாவின் ஆக்ரமிப்பு, ஹேராம் திரைப்படம், அரசியல் என பல்வேறு விவகாரங்கள் குறித்தும் காங்கிரஸ் எம்சி ராகுல் காந்தி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் இடையே நடந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் இருவரின் சந்திப்பு குறித்த விடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது.
காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை எனும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் கடந்த வாரம் தில்லியை வந்தடைந்தது. நடைப்பயணத்தில், ராகுல் காந்தியுடன் இணைந்துகொண்ட நடிகா் கமல் ஹாசன் சுமாா் 3 கி.மீ. யாத்திரையில் பங்கேற்றாா்.
அதன் பின்னா், தில்லி செங்கோட்டை முன் மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தியுடன் கமல் ஹாசன் கலந்துகொண்டாா்.
இதன் தொடர்ச்சியாக இரு தலைவர்களின் சந்திப்பு தில்லியில் நடைபெற்றது.
அதில் கமல் பேசுகையில், அப்பா காங்கிரசில் இருந்தார். அவரிடம் இளம்வயதில் காந்தியை விமரிசித்திருக்கிறேன். அதற்கு அப்பாவோ வரலாற்றை படி என்பார். பிறகு 24, 25 வயதில் காந்தியை பற்றி நானே தெரிந்து கொண்டேன். பிறகு அவரது ரசிகனாகவும் ஆகிவிட்டேன்.
அதை அடிப்படையாக வைத்தே ஹேராம் படத்தை எடுத்தேன். அந்தப் படத்தில் நானும் ஒரு கொலையாளியாக நடித்தேன். ஹேராம் படம், காந்திஜியை கொல்ல முயல்பவரின் கதை.
ஆனால் அவருக்கும் உண்மைக்கும் அருகே செல்ல செல்ல கொலையாளி மாறிவிடுகிறான். ஆனால் அது மிகவும் தாமதம். அவனுடன் இருந்தவர் அதைச் செய்துவிடுகிறார். ஆனால் என்ன அவன் மனம் மாறிவிட்டான். இது தான் ஹேராம் என்று கமல் சொல்கிறார்.
இது உங்களின் யோசனையா? என்று ராகுல் காந்தி கேட்க, ஆம், என் இது என் தந்தையிடம் நான் கேட்கும் மன்னிப்பு என்று கமல் பதிலளித்தார்.
பிறகு, சீன ஆக்ரமிப்பு குறித்து ராகுல் பேசுகையில், முன்னாள் ராணுவ வீரர்களிடம் பேசினேன். 21ஆம் நூற்றாண்டில் நமது பாதுகாப்பு அத்தனை சிறப்பானதாக இல்லை என்கிறார். தாக்குதல் எல்லையில் இருந்துதான் வர வேண்டுமென்று இல்லை, உள்ளிருந்தும் வரலாம்.
இணையத் தாக்குதல்கள், ஊடகத் தாக்குதல்கள் என பலவிதமாக நடக்கலாம். 21ஆம் நூற்றண்டில் பாதுகாப்புப் பற்றி நமக்கு ஒரு உலகக் பார்வை வேண்டும்.
அதில் நமது மத்திய அரசு தப்புக் கணக்குப் போட்டுவிட்டதோ என்று தோன்றகிறது. சீனா நமது எல்லையில் 2000 கிலோ மீட்டர்களை ஆக்ரமித்துள்ளது. ஆனால் நாம் அதைப் பற்றி எதுவுமே பேசவில்லை. பிரதமரும் எதுவும் கூறவில்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.