மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அருணாசலப் பிரதேசத்தில் கட்டப்பட்டு வந்த சியோம் பாலத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று திறந்து வைத்தார்.
மேலும், எல்லையோர சாலைகள் நிறுவனம் மூலம் நிறைவேற்றப்பட்ட 27 திட்டங்களையும் இன்று ராஜ்நாத் சிங் துவக்கி வத்துள்ளார்.
இந்திய எல்லையோர உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவும் வகையில், ரூ.724 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், பெரும்பாலும் சீன எல்லையையொட்டி லடாக் - அருணாசலப் பிரதேசத்தை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
விழாவில் பேசிய ராஜ்நாத் சிங், நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் சிறப்பான மற்றும் எளிமையான போக்குவரத்து வசதியை உருவாக்க பிரதமர் தலைமையிலான மத்திய அரசு பணியாற்றி வருகிறது. குறிப்பாக வடகிழக்குப் பகுதிகளுக்கு என்று தெரிவித்துள்ளார்.
அலோங் - யின்கியோங் சாலை - 100 மீட்டர் எஃகு உலோகத்தால் வளைவுகளைக் கொண்ட இந்த பாலம், விரைவாக இந்திய படைகள் சென்று வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக அப்பர் சியாங் மாவட்டங்களுக்கு படைகளை எடுத்துச் செல்ல முடியும்.
இதையும் படிக்க.. கனத்த இதயத்துடன் பாஜகவிலிருந்து விலகுகிறேன்: காயத்ரி ரகுராம்
மேலும், காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில், அருணாசலம், ஜம்மு - காஷ்மீர், லடாக், உத்தரகண்ட், சிக்கிம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கட்டப்பட்ட 21 மேம்பாலங்கள், மூன்று சாலைகள், மூன்று கூடுதல் கட்டமைப்புகள் போன்றவற்றையும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.