பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணம் வெறும் சாதாரண நிகழ்வு அல்ல, பாஜகவின் வெறுப்பு சித்தாந்தங்களுக்கு எதிரான இயக்கம் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியாவில், சமூக ஏற்றத்தாழ்வுகள், பிளவுப்படுத்துதல் மற்றும் அரசியல் சர்வாதிகாரம் போன்றவை நிலவுவதாகவும் குற்றம் சாட்டினார். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது: பாஜகவைச் சேர்ந்தவர்கள் பாரதம் ஒன்றும் உடையவில்லை. பின்பு எதற்கு இந்த பாரதத்தை இணைப்போம் நடைப்பயணம் என கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நமக்கு முன்பு மூன்று பெரிய சவால்கள் உள்ளன. அதிகரித்து வரும் சமூக ஏற்றத் தாழ்வுகள், சமூக பிளவுப்படுத்துதல் மற்றும் அரசியல் சர்வாதிகாரம் போன்றன நமக்கு முன்பு பெரும் சவாலாக உள்ளன. இந்த பிரச்னைகள் பிரதமர் நரேந்திர மோடி அரசு மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினால் வளர்க்கப்பட்டு வருகிறது. பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணம் பாஜகவின் இந்த பிளவுப்படுத்தும் சித்தாந்தங்களுக்கு எதிரானதே. கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை செல்லும் இந்த நடைப்பயணம் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியைப் போன்ற பயணம் கிடையாது.
ராகுல் காந்தி அதிகம் கவனிப்பார், குறைவாக பேசுவார். பாரதத்தை இணைப்போம் நடைப்பயணம் பெரிய பேச்சுகளை நிகழ்த்துவதற்காக வாய்ப்பளிக்கும் மேடை அல்ல. விவசாயிகள், தலித்துகள், ஆதிவாசிகள், பெண்கள் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலரும் இந்த ஒற்றுமைப் பயணத்தில் கலந்து கொண்டு தங்களது பிரச்னைகளை ராகுல் காந்தியிடம் தெரிவிக்கிறார்கள். இந்த நடைப்பயணம் மக்களின் பிரச்னைகளை தெரிந்து கொள்ளவும், அவர்களது குரல் கேட்கப்படவும் முன்னெடுக்கப்பட்டதாகும். அவர்களை பிரச்னைகளை ராகுல் காந்தி கேட்டறிந்து வருகிறார். பாரதத்தை இணைப்போம் நடைப்பயணம் ஒரு நிகழ்வு அல்ல, அது ஒரு இயக்கம் என்றார்.