பெண் ஒருவரின் புகைப்பத்தை தவறாக சித்தரித்து அனுப்பியதாக ஒருவரை 59 பெண்கள் ஒன்றாக சேர்ந்து கண்மூடித்தனமாகத் தாக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் கேரளத்தின் திரிசூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தில் காவல் துறை 11 பெண்களின் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். அந்தப் பெண்கள் அனைவரும் மதம் சார்ந்த மையம் ஒன்றின் பக்தர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: விஜய் - சங்கீதா விவாகரத்தா? சர்ச்சை குறித்த அப்டேட்!
இந்த சம்பவத்தில் ஷாஜி என்பவர் இந்தப் பெண்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் ( ஜனவரி 5) ஷாஜி மற்றும் அவரது உறவினர்கள் 5 பேர் காரில் சென்றுள்ளனர். அப்போது மதம் சார்ந்த மையத்தினைச் சேர்ந்த பெண்கள் ஷாஜின் காரை மறித்து அதில் பயணம் மேற்கொண்டவர்களைத் தாக்கியுள்ளனர். பெண்கள் பலரால் தாக்கப்படும் ஷாஜியின் விடியோ சமூக ஊடகங்களில் வைராகி வருகிறது.
அந்த விடியோவில் பதிவாகியிருப்பதாவது: பெண் ஒருவர் காரிலிருந்து அந்த நபரை (ஷாஜியை) வெளியே இழுத்து வருகிறார். பின்னர், அவரை இரக்கமின்றி கண்மூடித்தனமாகத் தாக்க ஆரம்பிக்கிறார். அவர் கையில் குச்சியினை வைத்தும் பலமாக தாக்குவது போன்ற காட்சிகள் அந்த விடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது: இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு ஆளான ஷாஜி, முரியாத் பகுதியைச் சேர்ந்தவர். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில் ஷாஜியும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மதம் சார்ந்த மையத்துக்கு செல்வதை நிறுத்திக் கொண்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் அந்த மதம் சார்ந்த மையத்தில் சுற்று சுவருக்கு வெளியே ஷாஜி காரில் சென்றபோது நிகழ்ந்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஷாஜி கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டது. அவரது காரின் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டது. இந்தப் பெண்கள் அனைவரும் தன்னை தவறாகப் புரிந்து கொண்டு தாக்கியதாக ஷாஜி புகார் அளித்துள்ளார் என்றனர்.
இந்த சம்பவம் குறித்து பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.