
உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழக்க காரணமாக இருந்த இந்திய இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் செயல்படும் ‘மேரியன் பயோடெக்’ என்ற நிறுவனத்தின் தயாரிப்பான ‘டோக்-1 மேக்ஸ்’ என்ற இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதால், உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் குற்றம்சாட்டியது. அத்துடன், மருந்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எத்திலீன் கிளைக்கால் ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அந்த அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ‘மேரியன் பயோடெக்’ நிறுவனம் தயாரிக்கும் ‘டோக்-1 மேக்ஸ்’ மற்றும் ‘அம்ப்ரோனால்’ என்ற இரண்டு இருமல் மருந்துகளையும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக் குழு பரிசோதித்தது.
இதில், இரண்டு இருமல் மருந்துகளிலும் அளவுக்கு அதிகமான எத்திலீன் கிளைக்கால் ரசாயனம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், இரண்டு மருந்துகளும் குழந்தைகள் பயன்படுத்துவதற்கு உகந்ததல்ல என்று அறிவித்துள்ளது.
ஏற்கெனவே, மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் உடல்நலக் குறைவால் கடந்த அக்டோபரில் உயிரிழந்தனா். இதற்கு, ஹரியாணா மாநிலம், சோனிபட் மெய்டன் மருந்து நிறுவனத்தில் சா்ச்சைக்குரிய வகையில் தயாரிக்கப்பட்ட மாசடைந்த நான்கு இருமல் மருந்துகள் காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு (டபிள்யுஹெச்ஓ) எச்சரித்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளின் பயன்பாட்டைக் கைவிடுமாறும் அந்த அமைப்பு உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டது.
இந்த சம்பவங்கள் உலக அளவில் இந்திய மருந்துகளின் நற்பெயர் மீது எதிா்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.