தலைநகர் மாஸ்கோவில் இருந்து 240 பயணிகளுடன் கோவா நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டலைத் தொடர்ந்து உஸ்பெகிஸ்தானுக்கு அவசரமாகத் திசை திருப்பப்பட்டது.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில்,
தெற்கு கோவாவில் உள்ள டபோலிம் விமான நிலையத்தில் அதிகாலை 4.15 மணிக்கு விமானம் தரையிறங்கத் திட்டமிடப்பட்டது.
அசூர் ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் விமானம் (AZV2463) இந்திய வான்வெளிக்குள் நுழைவதற்கு முன்பு உஸ்பெகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டது.
விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்ட டபோலிம் விமான நிலைய இயக்குநருக்கு நள்ளிரவு 12.30 மணியளவில் மின்னஞ்சல் வந்ததைத் தொடர்ந்து விமானம் திசைதிருப்பப்பட்டது.
முன்னதாக, குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து மாஸ்கோவிலிருந்து கோவா செல்லும் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.