புதுதில்லி: பல தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிநீக்கங்கள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், நாட்டின் நிலைமையை மதிப்பிட்டு சரியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை திங்கள்கிழமை கேட்டுக் கொண்டார்.
பன்னாட்டு ஐடி நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இந்த நடவடிக்கையால் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளிலும் தொழிலாளர்கள் தங்களது வேலையை இழந்து வந்தனர்.
சமீப நாட்களாக ஐடி துறையில் இருந்து இளைஞர்கள் பெருமளவில் வெளியேற்றப்படுகிறார்கள். மத்திய அரசு இந்த நிலைமையை மறுபரிசீலனை செய்து சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரவிந்த் கேஜரிவால் ஹிந்தியில் ட்வீட் செய்துள்ளார்.
இந்நிலையில், இந்த மாத தொடக்கத்தில், மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரியான சத்ய நாதெல்லா, அந்நிறுவனத்தில் பணியாற்றும் 10,000 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றார். உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலைமைகளுக்கு மத்தியில் இத்தகைய முடிவு கடினமானது என்றார். தொழில்நுட்ப உலகத்திற்கு இது போதாத காலம். பணி நீக்கம் செய்யப்படுபவர்கள் அந்நிறுவனத்தில் உள்ள மொத்த பணியாளர்களில் சுமார் ஐந்து சதவிகிதமாகும்.
ஃபேஸ்புக் மற்றும் அமேசானுக்குப் பிறகு 2023ஆம் ஆண்டில் தொழில்நுட்பத் துறையில் வேலைகளை குறைக்கும் சமீபத்திய நிறுவனம் மைக்ரோசாப்ட் ஆகும்.
இது குறித்து ஐடி பணியாளர் ஒருவர் தனது மனக் குமுறலுடன் தெரிவிக்கையில், நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிக அளவில் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார் .