உத்தரகண்டில், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 வாகனங்கள் புதைந்த நிலையில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலியாகினர். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.
உத்தரகண்ட் மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், திங்களன்று இரவு உத்தரகாசியில் உள்ள கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் ஒரு டெம்போ டிராவலர் மற்றும் இரண்டு கார்கள் இடிபாடுகளில் சிக்கியதோடு, வாகனத்தின் மீது கற்பாறைகள் மோதின. இதனால் வாகனத்தில் பயணித்த 21 பேரில் 4 பேர் பலியாகினர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாநில பேரழிவு மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். நிலச்சரிவில் புதையுண்டு பலியான நான்கு பேரில் மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. நான்காவது நபரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக பட்வாடி துணை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும், நிலச்சரிவில் காயமடைந்த ஏழு பேரில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவத்துக்கு உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். கனமழையின்போது தேவையற்ற பயணத்தைத் தவிர்க்குமாறு மக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.