தில்லியில் மத்திய அரசின் மதிய தலைமை வழக்கறிஞருடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(செவ்வாய்க்கிழமை) சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் அமலாக்கத் துறையினால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜியை நீக்கம் செய்தது; பின்னா் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையீட்டினால் அந்த உத்தரவை நிறுத்தி வைத்தது பரபரப்பை கிளப்பியது.
அதேநேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மீதான நீதிமன்ற நடவடிக்கைக்கு தமிழக அரசு அனுமதி கோரும் விவகாரத்தில் ஆளுநரின் பதில், தமிழக அரசின் பல்வேறு மசோதாக்களுக்கு அனுமதி அளிப்பது என மோதல் அதிகரித்து வருகிறது.
இதையும் படிக்க | அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு: ஆளுநர் மாளிகை விளக்கம்
இந்த சூழ்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆளுநர் ஆர்.என்.ரவி தில்லி சென்ற நிலையில் சனிக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.
இதன் தொடர்ச்சியாக இன்று தில்லியில் மத்திய அரசின் மதிய தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கட்ரமணியை சந்தித்துப் பேசியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், சட்ட சிக்கல் எழாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல பிரமுகர்களை சந்திக்கும் ஆளுநர், ஜூலை 13 ஆம் தேதி மாலை சென்னை திரும்புகிறார்.
இதையும் படிக்க | மேற்குவங்கத்தில் வாக்கு எண்ணும் மையத்தின் வெளியே வெடிகுண்டு வீச்சு!