கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுடன் மத்திய அரசு உள்ளதாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஹிமாசலுக்கு இரண்டாவது தவணையாக மத்திய அரசு ரூ.181 கோடி விடுவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஹிமாசலில் கனமழையால் பாதித்த மாவட்டங்களை நேற்று (ஜூலை 14) பார்வையிட்ட நிலையில் இன்று இதனை தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சிறுவனின் துண்டான தலையை ஒட்டவைத்த மருத்துவர்கள்
இது தொடர்பான அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஹிமாசல் மாநிலத்துக்கான இரண்டாவது தவணை நிதியாக ரூ.180.40 கோடி விடுவிக்க ஒப்புதல் வழங்கியுள்ளார். ஹிமாசலில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய இந்த தொகை இடைக்கால நிவாரணமாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகையைக் கொண்டு கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை மேற்கொள்ளும். முன்னதாக ஜூலை 10 ஆம் தேதி முதல் தவணையாக ரூ.180.40 கோடியை மத்திய அரசு விடுவித்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பேசியதாவது: கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்காக முதல் தவணையாக மத்திய அரசு ரூ.180 கோடியை விடுவித்தது. தற்போது இரண்டாவது தவணையாக ரூ.181 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக ரூ.361 கோடி ஹிமாலின் நிவாரணப் பணிகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த பேரிடர் தொடர்பான மேலும் பல உதவிகள் ஹிமாசலுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த பேரிடரால் ஹிமாசலின் கடன்சுமை அதிகரித்துள்ளது. மத்திய அரசின் நிவாரண விடுவிப்பு அந்த சுமையை குறைக்கும். இந்த கடினமான சூழலில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுடன் மத்திய அரசு துணை நிற்கும் என்றார்.