கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவை தொடர்ந்து, அம்மாநிலத்தில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உம்மன் சாண்டிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொண்டை புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த உம்மன் சாண்டி பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் இன்று காலமானார்.
இவரது உடல் தற்போது பெங்களூருவில் இருந்து அவரது சொந்த ஊரான கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்திற்கு கொண்டு வரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2019 முதல் உடல்நிலை சரியில்லாமல் இருந்த உம்மன் சாண்டி ஜெர்மனியில் உள்ள ஒரு மருத்துவமனையில் தொண்டை நோய்க்காக லேசர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.