மணிப்பூரில் பாலியல் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று தேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினா் நடத்திய போராட்டம் இனக் கலவரமாக மாறி கடந்த 2 மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது.
இந்நிலையில், குகி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கிய கலவரக்காரர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடியோ இணையத்தில் வைரலான நிலையில் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மணிப்பூரில் வன்முறை தொடங்கிய நேரத்தில் கடந்த மே 4 ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க | மணிப்பூர் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது: பிரதமர் மோடி
இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'எந்தவொரு சூழ்நிலையிலும் இத்தகைய குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனையைத் தவிர வேறு எதையும் கேட்க முடியாது. இதுபோன்ற கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட ஆண்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும், இதனை வேடிக்கை பார்த்தவர்களையும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
வகுப்புவாத கலவரங்கள், குடும்பச் சண்டை, தனிப்பட்ட பழிவாங்கல் அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகளுக்கு பெண்கள் குறிவைக்கப்படுகிறார்கள். சில ஆண்கள் எவ்வளவு முதுகெலும்பில்லாதவர்கள், கோழைத்தனமானவர்கள், பாதுகாப்பற்றவர்கள், மனிதாபிமானமற்றவர்கள் என்று இது காட்டுகிறது' என்று பதிவிட்டுள்ளார்.