பஞ்சாபில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் அம்மாநிலத்துக்கு ரூ.1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
இழப்புகள் குறித்த விரிவான அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், அதற்கான நிவாரண நிதி கோரப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த மாதத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் உள்ள பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது: மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து விரிவான அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்படும். மக்களுக்கு இழப்பீட்டுத் தொகை தரப்படும். பக்ரா நங்கல் அணையின் நீர்மட்டம் அபாயம் ஏற்படும் அளவுக்கு இல்லை. அரசு தொடர்ந்து அணையின் நீர்மட்டத்தை கவனித்து வருகிறது. பக்ரா நங்கல் அணை தொடர்பான அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அபாய கட்டத்துக்கு குறைவாகவே அணையில் நீர் இருப்பதால் அணையில் உள்ள நீரை உடனடியாக வெளியேற்றுவதற்கான தேவை ஏற்படவில்லை. அணையின் முழு கொள்ளளவு 1,680 அடியாக உள்ள நிலையில், இன்றைய நிலவரப்படி அணையில் 1,653 அடி வரைக்கும் நீர் நிரம்பியுள்ளது. இது அபாய கட்டம் இல்லை. அதனால் மக்கள் குழப்பமடைய வேண்டாம். அணையில் நீர் திறப்பது குறித்தும், வெள்ள அபாயம் குறித்தும் பரவும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றார்.