மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தரவுகள்படி, இந்திய மக்கள்தொகை 139 கோடி என மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இது குறித்து மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மக்கள்தொகைக்கான தேசிய ஆணையத்தின் தொழில்நுட்பக் குழு, நாட்டின் மக்கள்தொகை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஜூலை 1-ஆம் தேதி நிலவரப்படி நாட்டின் மக்கள்தொகை 139 கோடி 23 லட்சத்து 29 ஆயிரமாகும்.
இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு முதல், பட்டியல் மற்றும் பழங்குடியினர் தவிர்த்து பிற ஜாதியினரின் எண்ணிக்கை குறித்த தகவல் சேகரிக்கப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.