மாநிலங்களவைத் தொடர்ந்து முடக்கப்பட்டு வரும் நிலையில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க கோரி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
8-வது நாளான இன்று மாநிலங்களவையில் பிற்பகல் 2 மணிக்கு மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க பட்டியலிடப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமளி தொடர்ந்தது.
இதையடுத்து மல்லிகார்ஜுன கார்கேவை அழைத்து ஜகதீப் தன்கர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இந்த பேச்சுவார்த்தையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மத்திய வெளியுறவு இணையமைச்சர் முரளிதரன், மாநிலங்களவை உறுப்பினர் சையது நசீர் ஹுசைன் ஆகியோர் பங்கேற்றனர்.