இந்தியாவின் போற்றத்தக்க மகன் கோட்சேவா? - கபில் சிபல் கண்டனம்

காந்தியை கொலை செய்த நாதூராம் கோட்சேவை இந்தியாவின் போற்றத்தக்க மகன் என்பதா? என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்க்கு  கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கபில் சிபல் (கோப்புப்படம்)
கபில் சிபல் (கோப்புப்படம்)


புதுதில்லி: காந்தியை கொலை செய்த நாதூராம் கோட்சேவை இந்தியாவின் போற்றத்தக்க மகன் என்பதா? என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்க்கு முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: கோட்சே இந்தியாவின் போற்றத்தக்க மகன் என்றும், பாபர், அவுரங்கசீப் போன்று படையெடுத்து வந்த முகலாயர்களைப் போல் அவர் வெளிநாட்டில் இருந்து வந்தவரில்லை. இந்தியாவில் பிறந்தவர் என்றும், அவுரங்கசீப், பாபரை. திப்பு சுல்தானைக் கொண்டாடுபவர்கள் இந்தியாவின் மகன்களாக இருக்க இயலாது என்றும் கூறி இருக்கிறீர்கள். மத்திய அமைச்சரான உங்களின் இந்தக் கருத்தால், பலர் உங்களை இந்தியாவின் போற்றத்தக்க மகன் என்று அழைக்க மாட்டார்கள். 

கொலையாளியின் பிறந்த இடத்தைக் கொண்டு அவரைப் போற்ற முடியாது. இந்த கருத்தை பிரதமரும், உள்துறை அமைச்சரும் கண்டிப்பார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கபில் சிபல், “கிரிராஜ் சிங்கின் கூற்றுப்படி கோட்சே நல்லவர். ஆங்கிலேயர்களுக்கு உதவிய அமைப்பு ஆர்எஸ்எஸ். காந்தியை அவர்கள் எப்படி ஒப்புக்கொள்வார்கள்? இதுபோன்ற மனநிலை காந்தி கொள்கைகளுக்கு எதிரானது என தெரிவித்துள்ளார். 

மேலும், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நிற்க வேண்டும். ஒற்றுமையாக தேர்தலில் போட்டியிட வேண்டும். அதன் மூலம், தற்போதைய அரசை வீழ்த்த வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலின்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள்வார்கள் என்று நம்புகிறேன் என்று கபில் சிபல் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com