அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய விலை நிர்ணயம் செய்வது உள்பட மிகப் பெரிய ஊழலில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசு ஈடுபட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் குற்றம்சாட்டியுள்ளார்.
சில அமைச்சர்களின் உதவியாளர்களின் வீடுகளில் ஊழல் தொடர்பாக சோதனை செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது: மகாராஷ்டிரத்தின் நிர்வாகத் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசே காரணம். அவரது அமைச்சரவைக் குழுவில் 43 அமைச்சர்கள் வரை இருக்கலாம். ஆனால், அவரது அமைச்சரவைக் குழுவில் வெறும் 20 அமைச்சர்களே இருந்தனர். ஒவ்வொரு அமைச்சரும் அதிகப்படியான பணிகளை கவனிக்க வேண்டியிருக்கும். அனைத்து அமைச்சர்களும் பல துறைகளின் வேலைகளை கவனிக்க வேண்டியிருக்கும். அவர்களால் இந்த அனைத்து பொறுப்பையும் கவனித்துக் கொள்ள முடியும் எனக் கூறலாம். ஆனால், இதனால் நிர்வாகத்தின் திறன் குறைகிறது. விவசாயிகள் தங்களது விளைபொருள்களுக்கு உரிய விலையினைப் பெறுவதில்லை என்றார்.