அரசு மருத்துவமனையின் மூன்றாவது தளத்துக்கு தனது மகனை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அழைத்து வந்த வழக்கறிஞரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்துள்ளது. மனோஜ் ஜெயின் என்ற வழக்கறிஞர் தனது 15 வயது மகனுடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வந்துள்ளார். மருத்துவமனையில் பணிபுரிபவர்களிடம் அவர் சக்கர நாற்காலி கேட்டுள்ளார். அதற்கு அங்கு பணிபுரிபவர்கள் சக்கர நாற்காலி தற்போது இல்லை எனக் கூற, தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வார்டு வரை ஓட்டிச் செல்ல அனுமதி கேட்டுள்ளார். அனுமதி பெற்ற பிறகு மூன்றாவது தளத்தில் உள்ள எலும்பு முறிவு பிரிவுக்கு தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இயக்கி சென்றுள்ளார்.
இருப்பினும், தந்தை-மகன் இருவரும் மீண்டும் வாகனத்தில் திரும்புகையில் அந்த வார்டின் பொறுப்பாளர் இவர்களை இடைமறித்து வாகனத்தின் சாவியை பிடுங்கியுள்ளார். இதனையடுத்து, அந்த வழக்கறிஞர் அரசு மருத்துவமனையின் நிர்வாகக் குறைபாடு குறித்து கூச்சலிட்டு பிரச்னை செய்துள்ளார். இதையடுத்து, காவல் துறைக்கு தகவலளித்து காவல் துறை தரப்பில் மருத்துவமனைக்கு விசாரணைக்கு வந்துள்ளனர்.
மருத்துவமனைக்கு வந்து அவர்கள் இரு தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் கூறியதாவது: இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் வழக்கு கொடுக்க விரும்பவில்லை என்றனர்.
தினசரி 3000-க்கும் அதிகமான நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதால் அவர்களுக்கு உடனடியாக சக்கர நாற்காலி வழங்குவதில் சிக்கல் உள்ளதாக வாகனத்தின் சாவியை பிடுங்கிய வார்டு பொறுப்பாளர் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.